சனி, 23 நவம்பர், 2013

<>தை பிறந்தால் "வலி " பிறக்கும்......!<>

தை பிறந்தால் "வலி " பிறக்கும்......!

"என்னமோ ஒரு தைரியத்துல கெளம்பீட்டீங்க. ஆனா நாங்க, நீங்க இல்லாம எப்படி காலம் தள்ளப் போறோம்னு தெரியல... ஒடம்பைப் பாத்துக்கங்க... சூதானம்... பட்டினி கெடந்து சம்பாதிச்சு இங்க அனுப்பனும்ன்னு நெனைக்காம, நேரநேரத்துக்கு சாப்புடுங்க... எங்களைப் பத்தி அனாவசியமா கவலைப்படாதீங்க... அஞ்சாறு மாசத்துக்கு நீங்க பணம்கிணம் அனுப்ப வேணாம். மொத்தமாச் சேத்து அனுப்புனா அத வச்சு அடகு வச்ச நெலத்தையும் நகையையும் மீட்டுக்கிறேன். 

தை பொறந்தா வழி பொறக்கும்பாங்க. ஆறேழு மாசமிருக்கு தை வர்றதுக்கு. நம்மளுக்கும் வழி பொறக்காமலா போயிரும். முடிஞ்சா "தைப் பொங்கலுக்கு“ நீங்களே வந்துட்டுக்கூட போங்க... திரும்பப் போறப்ப எங்களையும்...” என்று மனைவி சாந்தி சொல்லிக் கொண்டே போக, கணவன் கந்தசாமி இடைமறித்தான்.

“ மூச்சுவாங்காம இப்டிப் பேசிக்கிட்டே இருந்தா நா மலேசியா போன மாதிரிதான்! எதிர்வீட்டு ஏகாம்பரத்தைப் பாருங்க சிங்கப்பூர் போய் சீமானாய் 
வாழ்ந்துகிட்டு இருக்காங்க; குடிசை வீட்டிலிருந்த குப்புசாமி குபேரனானது சிங்கப்பூர் சீமைக்குப் போய்த்தானே! என்று மூச்சுக்கு முன்னுறு தடவை சொல்லி சும்மா இருந்தவனை உசுப்பி விட்டாய்; "தை பொறந்தா வழி பொறக்கும்...தையும் பொறந்துருச்சு, கையகல நிலத்தை நல்ல விலைக்கு கேக்குறாங்க, எல்லாம் தை பொறந்த நேரம்...வித்துக் காசாக்கி ஏஜெண்ட்டைப் போய் பாருங்க என்று சொல்லி விரட்டினாய்... இப்ப என்னடான்னா, பொறப்புடுற நேரத்தில வீர வசனம் பேசுற! எனக்கு நேரமாச்சு...மகன் செல்வத்தையும் மகள் பூரணத்தையும் நல்லா படிக்க வை...“ என்றவன், ஒரு மஞ்சள் பையில் தன் உடைமைகளைத் திணித்துக் கொண்டு கிளம்பினான்.

“ ஏங்க அந்த சின்ன சூட்கேசில் நாலு செட் துணிய வச்சு எடுத்துட்டுப் போகலாம். இப்படி ஏஜெண்ட் சொன்னாருன்னு மஞ்சள் பையில ஒரு மாத்துத் துணிய வச்சுக்கிட்டு கிளம்புறீங்க” என்று கேட்ட சாந்திக்கு, "அதெல்லாம் அங்க போனதும் வேலை குடுக்குற ஓனர் அட்வான்ஸ் தர்ற பணத்துல வாங்கிக்கலாம்ன்னு ஏஜெண்ட் தான் சொல்லீருக்கார்ல அப்புறம் என்ன?“ என்றவாறு பிள்ளைகளைப் பார்த்து அம்மா சொல்றதைக் கேட்டு நடக்கணும்... நா ஊருக்குப் போய் பணம் அனுப்புறேன். செல்வத்துக்கு அதுல நல்ல சைக்கிளா வாங்கிக்க... என்ன சரியா...” பூரணத்துக்கு ஒரு முத்தம் கொடுத்து மனைவிக்கு கை அசைத்து வரட்டுமா என்று கிளம்பினான், கந்தசாமி.

சட்டைப் பையை ஒரு முறை தொட்டுப் பார்த்துக் கொண்டான். அதில் ஏஜெண்டுக்கு கொடுக்கவைத்திருந்த கடைசித் தவணைப் பணம் பத்தாயிரமும், சென்னையில் ஏஜெண்ட்டைச் சந்திக்கச் சொல்லியிருந்த தம்புசெட்டித் தெரு முகவரிச் சீட்டும் பத்திரமாக இருப்பதை உறுதி செய்து கொண்டான்.

சென்னை செல்லும் வழியெல்லாம் கனவு மிதப்புகளில் கரைந்திருந்தான் கந்தசாமி. தன்னைச் சுற்றிக் கவ்வியிருந்த இருள் விலகி ஒளிமயமான எதிர்காலம் வரப்போவதை எண்ணிப் பார்த்தான்.

"சின்ன மீனைப் போட்டுத்தான் பெரிய மீனைப் பிடிக்க முடியும்“... ஏஜெண்ட் சொன்ன அந்தச் சின்ன மீனின் விலை ரெண்டு லட்சம் ரூபாய். பெரிய மீன்தான் அவனது மலேசிய வேலை, வருமானம்!

சாப்பாடு தங்க இடம் எல்லாம் தந்து மாதச் சம்பளம் 25 ஆயிரம்! ஒரு வருடத்தில் 3 லட்சம்! சேட்டு வட்டி அநியாய வட்டி. அதனால அவன்கடனை முதல்ல அடைக்கணும். அஞ்சுவருஷம் காண்ட்ராக்ட். மிச்ச நாலு வருஷத்துல பத்து பன்னெண்டு லட்சம் தேத்திடலாம். அப்பறம், நம்ம ஊருக்கு நாமதான் ராஜா! கந்தசாமியின் கண் முன் எதிர்காலம் சினிமாப்படம் போல் ஓடிக்கொண்டிருந்தது.

அந்தக் காசில்லாத கனவுச் சினிமா எப்போது முடிந்ததோ அந்தக் கனவுச் சுகத்திலேயே உறங்கியும் போயிருந்தான்.

தம்பு செட்டித் தெருவில் ஏஜெண்ட் கொடுத்திருந்த முகவரிக்குப் போன போது அங்கு நிறையப்பேர் அவனைப் போல மஞ்சள் பை சகிதமாக நின்று கொண்டிருந்தனர். வாலிப வயதிலிருந்து நடுத்தர வயதுவரை அங்கிருந்தவர்களில் ஒரு ஒற்றுமை தெரிந்தது. எல்லோரிடமும் கிராமத்துக் களை படிந்திருந்ததுதான். அவர்களின் முகங்களில் சந்தோஷக் கீற்றுக்கள்! இந்த மஞ்சள் பை, வேட்டி, சட்டை எல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான், என்ற அலட்சியம் அவர்கள் பேச்சில் மிளிர்ந்தது. கந்தசாமி தனக்குத் தெரிந்தவர்கள் யாரேனும் வந்திருக்கிறார்களா? என்று சுற்றிலும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டான்.

"மலேசியா போறவங்க உள்ள போய் கேசியர்ட்ட பணத்தைக் கட்டீட்டு பக்கத்து சந்துல இருக்கிற ஓட்டல்ல போய் பசியாறீட்டு வந்துருங்க...” என்று ஒரு ஆள் வெளியே வந்து சொல்ல கேசியரிடம் பணத்தைக் கொடுப்பதற்கு நான் முந்தி, நீமுந்தி என்று போக கந்தசாமியும் போய் நின்று கொண்டான் அந்த வரிசையில்.

மீனம்பாக்கம் விமான நிலையத்திற்குள் நுழைந்தபோது மஞ்சள் பைகள் எல்லாம், பட்டிக்காட்டான் மிட்டாய்கடையைப் பார்த்தது போல, பார்த்துப் பிரமிப்பை கண்களுக்குள் உள் வாங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

விமானத்தில் ஏறியதும் சிலர், "நான் ஜன்னல் பக்கமா உக்காந்துக்கிறேன். அப்பத்தான் எச்சிகிச்சி துப்ப வசதியா இருக்கும்,” என்று பேசிக்கொண்டு அவசரஅவசரமாக ஓடி ஜன்னல் ஓர இருக்கையில் அமர்ந்து அதைத் திறக்க முடியாமல் போனது குறித்து சோகமாகிப் போக, மஞ்சள் பைகளை எல்லாம் தள்ளிக்கொண்டு வந்திருந்த ஆள் அவரவர் இருக்கையில் சரிபார்த்து அமரவைத்தான்.
விமானம் ஓடுபாதையில் ஓடி ஜிவ்வென்று மேலே கிளம்பியபோது ஆகாயத்தில் பறப்பது போல உணர்ந்தான், கந்தசாமி. அவனுடைய மனமும் இறக்கை கட்டிப் பறக்க ஆரம்பித்தது.

மலேசியா எப்படி இருக்கும்? நம்ப புதுக்கோட்டை அளவுக்கு பெரிய டவுனா இருக்குமோ? இல்ல சென்னை மாதிரிக்கூட இருக்கும். நமக்கு அங்க என்ன வேலை குடுப்பாங்க? ஏஜெண்ட் சொன்னது சட்டென்று நினைவுக்கு வந்தது.

"விவசாயம் தெரிஞ்சா போதும். அங்கயும் போய் விவசாய வேலைதான். செம்பனைத் தோட்டத்தில் வேலை குடுப்பாங்க...” என்றுதானே சொன்னார். பனந்தோப்பு மாதிரி செம்பனந்தோப்பா இருக்குமோ?
கூடவே அவன் மாமனார் செல்லச்சாமி சொன்னதும் நினைவுக்கு வந்தது.

“ மாப்ளே, நீங்க சீமையில போய் நாலு காசு சம்பாதிக்கலாம்ன்னு நெனைக்கிறீங்க. நல்லதுதான். ஆனா, ரெண்டு லட்ச ரூபாய் குடுத்து அங்கபோய் கஷ்டப்படுறத இங்கயே அந்த ரெண்டு லட்சத்தை வச்சு எதாவது தொழில் செய்யலாமேங்கிறது என்னோட அபிப்ராயம். ரெண்டு லட்ச ரூபாயையும் குடுத்து கடல் கடந்து போய் ஊருபேரு தெரியாத இடத்துல அடிமை மாதிரி நீங்க கை கட்டிச் சேவகம் செய்யணுமா? இப்பல்லாம் வேலைக்குன்னு கூட்டீட்டுப் போய் நடுத்தெருவுல நிக்க வச்சிர்றாங்கன்னு நாலுபேர் நாலுவிதமா சொல்றாங்க. நல்லா யோசிச்சுக்கங்க. அதான் அவர் கடைசியா சொன்னது.


அப்படியெல்லாம் ஆயிருமா என்ன? அதான் ஏஜெண்ட்,” அப்படி எல்லாம் நடக்காது. அதுக்காகத்தானே உங்களை எல்லாம் ஒப்படைக்க கூடவே ஒரு ஆளை அனுப்புறேன். அவர் உங்களை எல்லாம் பத்திரமா வேலையில சேர்த்ததுக்கு அப்புறமாத்தான் இங்க வருவார்...” என்று சொல்லி ஒரு ஆளையும் அனுப்பியிருக்காரே என்று கூடவே மனசு சமாதானம் செய்தது. இங்கும் அங்குமாகத் தாவியது அவன் மனம்!

அஞ்சு வருஷத்தில் சேரும் பணத்தை வைத்து என்னல்லாம் செய்யலாம்.

முதல்ல ஒரு மாடிவீடு கட்டணும். நடுத்தெரு பெரியசாமி வீட்டைவிட பெரிசா கட்டணும். ஒரு கார் கூட வாங்கிக்கலாம். டவுன் நாகப்பன்கிட்ட சொல்லி ஒரு நல்ல வியாபாரம் ஆரம்பிச்சிட்டா நம்ம பக்கத்துல யாரும் நெருங்க முடியாது. கந்தசாமியின் எதிர்காலக் கனவுகள் ஏகாந்த்மாய் உலாக் கிளம்பிய சுகப்பொழுதுகளில் நீந்திக் களைத்து அப்படியே உறங்கியும் போனான்.

யாரோ எழுப்பும் சத்தம் கேட்டுக் கண் விழித்தபோது, "ம்ம்ம்...எறங்கு...எறங்கு இல்லைன்னா மறுபடியும் சென்னைக்கே போயிருவே,” என்று சொல்ல மளமளவென்று எழுந்து தன் பையை எடுத்துக்கொண்டு இறங்கினான்.

விமான நிலையத்தில் எல்லாம் முடித்துக்கொண்டு வெளியே வந்ததும் எல்லோரிடமும் இருந்த கடவுச்சீட்டை முகவரின் ஆள் வாங்கி வைத்துக் கொண்டான். எல்லோரையும் அள்ளிப்போட்டுக்கொண்டு அந்த நகரின் பிரமாண்ட வீதிகளில் அந்த வாகனம் பயணித்தபோது வானுயர்ந்த கட்டிடங்களையும் தெருக்களின் ஒழுங்கையும் கண்டு வியந்தவாறு வந்தான் கந்தசாமி.

நெடிதுயர்ந்த கட்டிடங்களுக்கு மத்தியில் ஒரு சிறிய வீட்டின் முன் வாகனம் நின்றது. அந்த வீட்டின் உட்புறம் பல அறைகளைக் கொண்டிருந்தது. அறைக்குப் பத்துப்பத்துப் பேர்களாக தங்க வைத்த முகவரின் ஆள், "கடைக்கோடியில் குளியல் அறை இருப்பதாகவும் எல்லோரும் குளித்து வாருங்கள். பசியாறிவிட்டு இன்றைக்கு ஓய்வு எடுங்கள். நாளை உங்களை எல்லாம் முதலாளியிடம் அழைத்துப் போய் வேலையில் சேர்த்துவிடுகிறேன்,” என்றான்.

குளித்து முடித்து எல்லோரும் வந்ததும் அங்கேயே இட்லி, தோசை என்று சாப்பிட்டானதும், காலாற வெளியே போய் ஒரு சுற்றுசுற்றிவிட்டு வரலாம் என்று பேசினார்கள். சிலர் கிளம்பத் தயாரானபோது கந்தசாமியும் ஒட்டிக்கொண்டு கிளம்பினான்.

அதற்குள் அங்குவந்த முகவரின் ஆள், "எங்க கிளம்பீட்டீங்க? வெளிய எல்லாம் போகக் கூடாது. இப்ப நாம வந்திருக்கிற இடம் சிங்கப்பூர்! நீங்க மலேசியாவில், எங்க வேண்டுமானாலும் போகலாம். சட்டப்படி இங்க நீங்களெல்லாம் வெளிய போகக்கூடாது. நீங்க வெளிய போய் போலீசில் மாட்டிக்கொண்டால் உங்கபாடு ஆபத்தாகிவிடும். “

"மலேசியாவுக்குன்னு கூட்டி வந்துட்டு ஏன் சிங்கப்பூருக்கு கூட்டி வந்தீங்க?“ ஒருவர் கோபமாய் குறுக்கே பாய, "நாம சென்னையை விட்டுக் கிளம்பும்போது உரிமையாள‌ர் தொலைபேசியில் அழைத்து சிங்கப்பூருக்கு வந்திடுங்கன்னு சொன்னதுனாலதான் நாம இங்க வந்தோம். அதை எல்லாம் உங்களுக்கு வெளக்கிச் சொல்லிக்கிட்டு இருக்க முடியாது, “ என்று சொன்னதும் எல்லாரும் "வாய்மூடி” ஆகிப் போனார்கள்.

சாப்பிடத் தூங்க, சாப்பிடத் தூங்க என்று ரெண்டு மூன்று நாள் நகர்ந்ததுதான் மிச்சம். ஒருவ‌ரும் வரவில்லை; முகவரின் ஆளும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சாக்குப்போக்குச் சொல்லிக் கொண்டிருந்தான்.

சிறைக்குள் இருப்பது போல உணர்ந்த கந்தசாமி, மாமனார் சொன்னது உண்மையாகிவிடுமோ என்ற பயமும் மெல்லத் தலைதூக்கியது.

சிங்கப்பூர் வந்த ஏழாவது நாள்! "எல்லாரும் இன்னைக்கு கெளம்புறோம்.” என்றான் முகவரின் ஆள். "எங்க? மலேசியாவுக்கா?“ ஏக காலத்தில் எல்லோரும் கேட்டனர். "இல்லை. சென்னைக்கே திரும்பப் போகிறோம். "ஏன்? ஏன்? “ என்ற எல்லோரின் குரலிலும் அதிர்ச்சியும் ஏமாற்றமும் தொக்கி நின்றது.

"முதலாளியின் மனைவி இறந்து போனதால அவர் திடீர்ணு கெளம்பித் தமிழ் நாட்டுக்குப் போயிட்டாராம். அவர் எப்பத் திரும்பி வருவார்னு தெரியாததால நாம அங்கேயே போய் முதலாளியைப் போய் பார்த்துட்டு அதுக்கு அப்புறம் நேரா மலேசியா வரலாம். என்ன செய்யிறது? உங்க நேரம், அவரோட மனைவி இறந்து போயிட்டாங்க. அவருக்கு அது முக்கியம்ன்னு போயிட்டார்...” என்று முகவரின் ஆள் சொன்னதைக் கேட்டு என்ன செய்வது என்று தெரியாமல் எல்லோரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.

சென்னை வந்தும் நாலைந்து நாள் ஓடிவிட்டது. எல்லோருக்கும் மலேசியக் கனவு கரைந்து, "மலேசியாவும் வேண்டாம், ஒரு மண்ணும் வேண்டாம் “ எங்க ரூபாயைக் குடுங்க ஊர் போய்ச் சேர்றோம்,” என்று கேட்கத் துவங்கியபோது கந்தசாமிக்கு அழுகை பொத்துக்கொண்டு வந்தது.

"இங்க பாருங்க, ஒரு மனுஷன் பொண்டாட்டியப் பறி கொடுத்துட்டு வந்து இருக்கார். அவங்க வீட்டுக்கு தெனமும் போன் போட்டு பேசறேன். அய்யா, எதுவும் பேசற நிலையில இல்லைன்னு வீட்டுல இருக்குறவங்க சொல்றாங்க. இன்னும் ஒரு மாசம் அவரு இங்கதான் இருப்பாராம். நீங்க அவங்கவங்க ஊருக்குப் போங்க. நான் ஏற்பாடெல்லாம் பண்ணீட்டு உங்களுக்கு தந்தி குடுக்கிறேன். அப்ப நீங்க வந்தாப் போதும்,” முகவர் சொல்லச் சொல்ல அங்கு சற்று நேரம் கனத்த மவுனம் நிலவியது.

"எங்க முன்னாடி நீங்க இப்ப போன் பண்ணுங்க நாங்க நம்புறோம்,” ஒரு இளவட்டம் கேட்டது.

"அப்ப, நான் சொல்றதுல உங்களுக்கு நம்பிக்கை இல்லை அப்படித்தானே!?“

"அதுக்கு இல்ல, நாங்களும் கொஞ்சம் திருப்தியா ஊருக்குப் போவோம்ல அதுக்குத்தான்“

முகவர், எதோ ஒரு நம்பரைச் சுழற்றிப் பேசினார். "அய்யா இருக்காங்களா? நான் முகவர் முனியாண்டி சென்னையிலிருந்து பேசறேன்."

"அப்டீங்களா? இல்ல... மலேசியாவில அய்யா வேலைக்கு எடுத்துக்கிறதா சொல்லீருந்தார். அவங்கள்லாம் ரெடியா இருக்காங்க. அதான் அய்யாட்ட கேட்டுட்டு...”

"அப்படி எல்லாம் இல்லீங்க. அய்யா சொல்லீட்டார்ன்னா மாறமாட்டார். எனக்கு அய்யாவோட நெலமை தெரியும். அவங்க பணம் கொடுத்துட்டமேன்னு கொஞ்சம்...’

"எத்தனை நாளுங்க? பதினைஞ்சு நாளா? சரிங்க நான் அவங்களை 15 நாள் கழிச்சு மலேசியாவுக்கு நேரா கூட்டீட்டு வந்து பாக்குறேன்னு சொல்லுங்க. தொந்தரவுக்கு மன்னிச்சுக்கங்க...” முகவர் பேசி முடித்துவிட்டு போனை வைத்தார். எல்லாரையும் ஒரு பார்வை பார்த்தார்.

"எல்லாரும் இப்ப நான் பேசினதைக் கேட்டீங்க இல்லையா? அய்யாவோட மகன் சின்னவர் தான் பேசினார். நீங்க நிம்மதியா போயிட்டு வர்ற 25ம் தேதி வந்திருங்க. நானே மலேசியாவுக்கு கூட்டீட்டுப் போய் வேலையில சேர்த்து விட்டுட்டுத்தான் மறுவேலை. சரிங்களா? எல்லாருக்கும் பெரிதாக ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைத்தார்.

காலையில் லெட்சுமி வீட்டுக்கு முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தாள். கந்தசாமி போன மச்சான் திரும்பி வந்தான் கதையாக வந்து நின்றான்.

"அடியாத்தே! இது என்ன சத்தம் இல்லாம வந்து நிக்கிறிங்க? “ லெட்சுமி கேட்டாள். “ வா, வா வீட்டுக்குள்ள சொல்றேன், “ என்று சொல்லியவாறு உள்ளே நுழைந்தான்.

விவரம் எல்லாம் சொன்னான். மனசுக்குள்ள மட்டும் ஒரு மூலையில “ ஏமாந்துட்ட, ஏமாந்துட்ட” என்று பெருங்குரலெடுத்து ஓலமிட்டாலும், 25ம் தேதி ஒரு நம்பிக்கை வெளிச்சம் ஏற்றப்பட்டதை எண்ணி சமாதானப் படுத்திக்கொண்டு, இன்னும் ரெண்டு வாரத்தில் போகத்தான போறேன், என்று சொன்னான்.


எதிர்பார்த்த 25ம் தேதி அதிகாலையில் முகவர் வீட்டுக்கு வந்து சேர்ந்த கந்தசாமி, தனக்கு முன்னால் மற்றவர்களும் வந்து மஞ்சள் பையோடு காத்திருந்ததைப் பார்த்தான். மெளனமாக நின்று கொண்டிருந்தவர்களிடம் முகவர் என்ன சொன்னார் என்று மெதுவாக விசாரித்தான். அதற்கு அவர், கையை நீட்டிக் காட்டினார். அப்போதுதான் அதைக் கவனித்த கந்தசாமிக்குப் பகீர் என்றது. பெரிய பூட்டு கதவில் தொங்கிக் கொண்டிருந்தது.

சிலர், எங்கயாவது வெளிய போயிருப்பார். வருவார் என்று சொல்ல, சிலர், "அது எப்படி நாமதான் இன்று வருவோம்ன்னு தெரியும்ல... அப்புறம் எப்டிப் போவார்? என்று கேட்க, ஒருவர், பக்கத்து வீட்டில் முகவர் பற்றி விசாரிக்க, அவங்க ஒரு வாரத்திற்கு முன்புதான் வீட்டைக்காலி செஞ்சுட்டுப் போனாங்க என்று சொல்லவும் கொஞ்ச நேரத்தில் அங்கே ஒப்பாரி வைத்து அழாத குறையாக “ அய்யோ, நெலத்தை வித்து, நகை நட்டை வித்துக் குடுத்து இப்டி மோசம் போகவா குடுத்தோம்.” என்ற புலம்பல்கள் பெரிதாக கேட்கத் துவங்கியது. கந்தசாமிக்கு மாமனார் சொன்னது அப்போதுதான் உறைத்தது. "புடிச்ச மீனும் போய், பொட்டி மீனும் போன" கதையாய்ப் போச்சே என்று எண்ணியபோது கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் பெருக்கெடுத்து விழத் துவங்கியது.


எல்லோரும் காவல் நிலையம் எங்கிருக்கிறது என்று விசாரித்துப் போனார்கள். நிலையத்திலிருந்தவர்களிடம் விபரம் சொன்னார்கள். அங்கிருந்த காவலர் கேட்டார், "இப்ப காவல் நிலையத்துக்குப் போகனும்ன்ணு வந்திருக்கீங்க. அவங்கிட்ட பணத்தைக் கொடுக்கிறதுக்கு முன்னாடி இப்படி ஒரு நடை வந்து ஏங்க இந்த முகவரை நம்பிப் பணம் கொடுக்கலாமான்னு யாருக்காவது கேக்கத் தோணிச்சா? அட, ஒருத்தருக்கு நாலுபேரிடம் விசாரிச்சுப் பாத்திருந்தா இந்த நிலைமை வந்திருக்குமாய்யா? அந்தாளு வீட்டுல பூட்டுத் தொங்கின பிறகு பக்கத்து வீட்டுல விசாரிச்சோம்கிறீங்க.

அதையே, அந்தாளு எப்படிங்க என்று விசாரிச்சு கொடுத்திருக்கலாம் இல்லையா? அவன் தொழிலே, உங்களை மாதிரி இளிச்சவாயன்களைத் தேடிப் பிடிச்சு காக்கா, குருவியா கூட்டீட்டுப் போய் ஒங்களுக்கே தெரியாம, ஒங்க பேர்ல...ஒங்க பணத்துல கடத்தல் சாமான்களை வாங்கியாந்து வித்துட்டு கடைய மூடீட்டுப் போயிட்டான்.

வாசற்படியில முட்டுன பிறகு குனிஞ்சு என்ன செய்ய? முட்டுறதுக்கு முன்னாடியே குனிஞ்சிருந்தா இப்படி மண்டை வீங்குமா? முப்பது பேர் ஆளுக்கு ரெண்டு லட்சம்ன்னு அறுபது லட்ச ரூபாயைக் கொட்டிக் கொடுத்திருக்கீங்க; அதுக்கு முப்பது பேரும் சேர்ந்து அதையே மூலதனமாப் போட்டு ஒரு தொழில் தொடங்கியிருந்தா, நீங்க நூறுபேருக்கு வேலை கொடுத்திருக்கலாமே ! யாராவது யோசிச்சுப் பாத்தீங்களா? சரி...சரி...எல்லாரும் புகார் எழுதிக் கொடுத்துட்டுப் போங்க ஆள் கெடைச்சா தகவல் சொல்றோம். அதெல்லாம் யானை வாயில போன கரும்பு... கிடைக்குமா பாப்போம்,” என்றார்.

கந்தசாமி இப்போது கடனோடு கடனாய் அவ்வப்போது பஸ் செலவுக்குப் பணம் வாங்கிக்கொண்டு புதுக்கோட்டைக்கும் சென்னைக்கும் முகவரைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறான்.

தை பொறந்தா வழி பொறக்கும்...லெட்சுமிகள் இருக்கிற வரைக்கும்,
தை பொறந்தா "வலி" பொறக்கும் கந்தசாமிகளும்

முளைத்துக் கொண்டேதானிருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக